2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!


2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!


சென்னை: சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இதில் உயர் கல்வி, பள்ளி கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. தமிழக சட்டப்பேரவை கடந்த மாதம் 18ம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடியது. அன்றைய தினம் தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19ம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது.

இந்த நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. தொடர்ந்து 7ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானியக்கோரிக்கை விவாதமும், 8ம் தேதி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. துறை சார்ந்த அமைச்சர் விவாதத்திற்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். தொடர்ந்து 9ம் தேதி(நேற்று முன்தினம்), 10ம் தேதி(நேற்று) என்று 2 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது.

கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் தொடங்கும். அதில் உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. அமைச்சர்கள் முறையே பொன்முடி, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பதிலுரை அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர். உயர், பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. கல்லூரி, பள்ளிகளில் உள்ள பேராசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்ந்து 12ம் தேதி(நாளை) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதமும், 13ம் தேதி(நாளை மறுநாள்) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மானியக்கோரிக்கை மீதான விவாதமும் நடக்கிறது. தொடர்ந்து 14ம் தேதி தமிழ்புத்தாண்டு, 15ம் தேதி புனித வெள்ளி, 16ம் தேதி சனிக்கிழமை, 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று என்று தொடர்ச்சியாக 4 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து 18ம் தேதி வருவாய்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. அதன் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது. மே 10ம் தேதி வரை கூட்டம் நடக்கிறது. கல்லூரி, பள்ளிகளில் உள்ள பேராசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

Comments

Popular posts from this blog